கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
திருபுவனத்தில் கடந்த 8 ஆம் தேதி 21 வயது நிரம்பிய இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திருபுவனம் காத்தாயி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரி சின்னப்பனை (45) போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சிகள், அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பினர் சார்பில் ஆயிரக்கணக்கானோர் திருபுவனம் கடைவீதியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கண்டன பேரணியும் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பட்டு நெசவுத் தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.