தஞ்சாவூரில் அரண்மனை தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலம் குத்தகை செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்ததால் புதன்கிழமை மீட்கப்பட்டது.
கரந்தையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்டது. இக்கோயிலுக்கு சொந்தமான 6.39 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் தஞ்சாவூர் அருகே கொடிக்காலூரில் உள்ளது. இந்நிலம் 5 பிரிவுகளாகப் பிரித்து குத்தகைக்கு விடப்பட்டது.
ஆனால், குத்தகைதாரர் 2011 ஆம் ஆண்டு முதல் குத்தகை செலுத்தாமல் ரூ. 1.50 லட்சம் நிலுவை வைத்திருந்தாராம்.
இதுதொடர்பாக குத்தகைதாரருக்கு அரண்மனை தேவஸ்தான நிர்வாகம் பல முறை நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் திரும்பச் செலுத்தாததுடன், நிலத்தையும் காலி செய்து தரவில்லை. எனவே, இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் நீதிமன்றத்தில் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில், நிலத்தை மீட்குமாறு தனித் துணை வட்டாட்சியர் பாலச்சந்திரன் அண்மையில் உத்தரவிட்டார்.இதன்படி, வருவாய் நீதிமன்ற அமலாக்க ஆய்வர் ரவிச்சந்திரன் முன்னிலையில், இந்நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டு, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.