தமிழக மக்களின், இளைஞர்களின், அரசுத் துறைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் விதமாக வெளியிடப்பட்டிருக்கும் அரசாணை எண் 56 நகலை தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் வியாழக்கிழமை மாலை எரித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரசாணை எண் 56 மூலம் அரசைத் தனியார் வசம் ஒப்படைக்கும் ஏற்பாடாக உள்ளது. இந்த அரசாணைத் தமிழக மக்களின், இளைஞர்களின், அரசுத் துறைகளின், அரசுப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அரசாணை எண் 56-ஐ தமிழக அரசுத் திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி அரசாணை எண் 56 நகலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் எரித்து முழக்கங்கள் எழுப்பினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். கோவிந்தராசு தலைமை வகித்தார். மாநிலச் செயலர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர் ஏ. ரெங்கசாமி, நிர்வாகி எஸ். கோதண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.