தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வியாழக்கிழமை அடையாள அட்டைகளை வழங்கினார் துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன்.
மரங்கள், இயற்கை சூழல் நிறைந்த இப்பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், வெளியாட்கள் வருவதைத் தடுப்பதற்காக, நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இந்த அடையாள அட்டை வழங்கும் பணியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இதில், முதல் கட்டமாக 50 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதுகுறித்து துணைவேந்தர் கூறுகையில், அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
மேலும், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் விண்ணப்பம் பெற நவ. 25-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் துணைவேந்தர்.
இந்நிகழ்ச்சியில் மொழிப்புல முதன்மையர் இரா. முரளிதரன், துணைப் பதிவாளர் ஜி. பன்னீர்செல்வம், கோட்டப் பொறியாளர் ப. செல்வபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.