ஒரத்தநாடு மற்றும் திருவோணம் பகுதியில் கஜா புயலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. இதனால், வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் டெல்டா விவசாயிகளின் 2ஆவது வாழ்வாதாரமாக விளங்குவது தென்னை சாகுபடியாகும். ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியில் தென்னை சாகுபடி பெருமளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கஜா புயலின் எதிரொலியாக அதிவேகத்தில் காற்று வீசியது. இதனால், ஒரத்தநாடு, திருவோணம் பகுதியில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு பெயர்ந்தும், முறிந்தும் விழுந்தன.
இதனால் தேங்காய் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
45 நாள்களுக்கு ஒருமுறை பத்தாயிரம் தேங்காய் வெட்டும் விவசாயிகளும் உள்ளனர்.
50 ஆயிரம் தேங்காய்கள் வெட்டும் விவசாயிகளும் உள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் இந்த புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலால் இப்பகுதியில் நடக்கும் தென்னை வணிகம் முற்றிலும் முடங்கிவிட்டது.