கஜா புயலால் சேதமடைந்து விழுந்த தென்னை மரங்களை அரசு செலவில் அப்புறப்படுத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரத்தநாடு, வடசேரி, தொண்டாரம்பட்டு, திருமங்கலக்கோட்டை, திருவோணம், பாப்பாநாடு , புலவன்காடு, உறைந்தரையான் குடிக்காடு, தெலுங்கன்குடிக்காடு, வாட்டாத்திக்கோட்டை, நம்பிவயல், அதம்பை , நடுவிக்கோட்டை உள்பட ஏரளாமான கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடும், பாதி முறிந்தும் நிலத்தில் விழுந்து கிடக்கின்றன.
இந்த பாதிப்பால் தென்னை விவசாயிகள் பலத்த சேதமடைந்து தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். புயலால் தென்னை மரங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஒருபுறம் இருந்தபோதிலும்,
அவற்றை அப்புறப்படுத்த பெரும் செலவு ஏற்படுவதால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து ஒரத்தநாடு வட்டம் கண்ணதங்குடி கீழையூரை சேர்ந்த தென்னை விவசாயி சீனி.அய்யாக்கண்ணு கூறியது:
30 ஏக்கரில் 2 ஆயிரம் தென்னை மரங்களை கடந்த 35 ஆண்டுகளாக பராமரித்து வந்தேன். கடந்த 10 தினங்களுக்கு முன்பு இந்த தென்னை மரங்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் உரமிட்டேன். கஜா புயலால் எனது தோப்பில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடும், பாதி முறிந்த நிலையிலும் விழுந்து சேதமடைந்துள்ளன.
இந்த மரங்கள் விழுந்ததில் ஒரு தென்னை விவசாயியாக எனக்கு ஆண்டுக்கு பல லட்சம் வருவாயை இழந்துள்ளேன். இந்நிலையில் விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்துவதால் பெரும் பொருளாதார செலவு ஏற்படும். எனவே, தென்னை விவசாயிகளின் நலன் கருதி, அரசே இந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும் என்றார்.