கும்பகோணத்தில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1033-ஆவது சதய விழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஊர்வலம் நடைபெற்றது.
ராஜராஜசோழன் சதய விழா கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தைத் சாரங்கபாணி சன்னதியிலிருந்து திருவடிக்குடில் சுவாமிகள் தொடங்கி வைத்தார். ராஜராஜன் சோழன் திருவுருவச்சிலை அமைக்கப்பட்ட ரதம் ஊர்வலாமாகப் புறப்பட்டு உச்சிபிள்ளையார் கோயில் வழியாக மகாமகக் குளம் சென்றடைந்தது.
நிகழ்ச்சியில் மாமன்னன் ராஜராஜசோழன்போல வேடமணிந்தும், தொன்மை கால நிகழ்வுகளை விளக்கும் மேளங்களுடனும் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் பாலா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்டப் பொருளாளர் கண்ணன், பாஜக நகரச் செயலர் சோழராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், கும்பகோணம் வீர சைவ மடத்தில் திருமுறை பாராயணம், வேத மந்திரங்கள், மாமன்னன் வரலாற்றுச் சொற்பொழிவு, திருமந்திர திருவாசகச் சொற்பொழிவு, நாட்டியாஞ்சலி, கோலாட்டம் ஆகியவை நடைபெற்றது.