தஞ்சாவூரில் பெண் காணாமல்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட இருவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் விஜய ராஜேஷ்குமார். இவருக்கும், தஞ்சாவூர் அண்ணா நகரைச் சேர்ந்த சந்திரனின் மகள் யாழினிக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த விஜயராஜேஷ்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை தொடர்பாக வெளிநாட்டுக்குச் சென்றார். இதனிடையே, யாழினி சென்னையில் உள்ள சட்டக் கல்லூரியில் சேர்ந்து தற்போது மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, யாழினி தஞ்சாவூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜயராஜேஷ்குமார் அண்மையில், தனது மனைவி யாழினிக்கும், அவருடன் படித்து வரும் ரத்தீசுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், யாழினியை சில நாட்களாகக் காணவில்லை எனவும், இதற்கு ரத்தீசும், அவரது நண்பர் சுனிலும் காரணம் எனவும் புகார் செய்தார். இதன் பேரில் ரத்தீஷ், சுனில் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2011 - 16 ஆம் ஆண்டுகளில் மாநில மீன்வளத் துறை அமைச்சராக இருந்த நாகையைச் சேர்ந்த கே.ஏ. ஜெயபாலின் மகன் ரத்தீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.