கும்பகோணம் அருகே திருமேற்றழிகை பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து சேதமானது.
கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரம் கிராமம், திருமேற்றழிகை காலனித் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவா. இவரது மனைவி தனலட்சுமி (30). சிவா திங்கள்கிழமை வேலைக்குச் சென்றுவிட, தனலட்சுமி தனது கூரை வீட்டில் குழந்தையுடன் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவெனப் பரவியதைப் பார்த்த தனலட்சுமி, தனது குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியில் ஓடிவந்துவிட்டார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். தீ விபத்தில் தனலட்சுமி வீட்டில் இருந்த சுமார் ரூ. 60,000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அமைச்சர் ஆறுதல்: தீவிபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தனலட்சுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவித் தொகையையும், வேஷ்டி, சேலையும் வழங்கி, ஆறுதல் கூறினார். மேலும், அரசு ஒதுக்கீட்டில் வீடு கட்டித் தரவும் அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.