அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது நபி விழா கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ.அபுல்ஹசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு ஜமாத்துல் உலமா துணைப் பொதுச் செயலாளர், கோயம்புத்தூர் கரும்புக்கடை சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி ஏ.அப்துல் அஜீஸ் பாஜில் பாக்கவி பேசுகையில், அமைதி, நீதி, கருணை ஆகியவற்றுக்குச் சொந்தக்காரரான நபிகள் நாயகம் மனிதரிடத்தில் சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் போன்ற நற்பண்புகளை விதைத்தவர் என்றார்.
நபிகள் நாயகம் குறித்து 'மறைகள் போற்றும் மாநபி' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, 'நபி வழித்திருமணம்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வர் ஏ. முகம்மது முகைதீன் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் அ. கலீல் ரஹ்மான் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். துணை முதல்வர் எம்.நாசர் நன்றி கூறினார்.