தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இந்து சமய அறநிலையத் துறைச் செயல் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வில் 1,476 பேர் பங்கேற்று எழுதினர்.
தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்தது: இத்தேர்வுக்கு 2,786 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1,476 பேர் தேர்வு எழுதினர். 1,310 பேர் வரவில்லை. அதாவது, 53 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்ட அலுவலர்கள் கவனமாகப் பணியாற்றவும், 100 சதவீதம் தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும், தேர்வு எழுதுபவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. தேர்வு நடைபெற்ற மையங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன என்றார் ஆட்சியர்.