தமிழகத்தில் உயர் கல்வியில் பெண்களின் பங்கு அதிகரித்து முன்னேறி வருகிறது என்றார் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் ஜோதி வெங்கடேசுவரன்.
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசியது:
நாட்டில் கேரளத்தில்தான் கல்வி கற்றவர்களின் சதவீதம் அதிகம் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இந்திய அளவில் உயர்கல்வியில் பெண்கள் சராசரியாக 26.4 சதவீதம் பேர் முன்னேறியுள்ளனர். அதில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாடு அரசுக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இலவச மடிக்கணினி, பயண சலுகை, கல்வி உதவித்தொகை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்கிறது. இதுவே, உயர் கல்வியில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதற்குக் காரணம். இதனால்தான் அதிகளவில் பெண்கள் கல்விக் கற்ற மாநிலம் என்ற பெருமையைத் தமிழகம் பெற்றுள்ளது. தமிழக அரசு பட்ஜெட்டில் உயர் கல்வித் துறைக்கு ரூ. 4,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே கல்லூரியில் பல ஆயிரம் மாணவர்கள் படிப்பதைக் குறைக்கும் வகையில், 20 கி.மீ.க்கு ஒரு அரசுக் கல்லூரி என்ற திட்டம் கொண்டு வரப்படுகிறது என்றார் ஜோதிவெங்கடேசுவரன்.
விழாவுக்குக் கல்லூரி முதல்வர் சிந்தியாசெல்வி தலைமை வகித்தார். இதில், பேரவை நிர்வாகிகள் 11 பேரின் பணிகள் பாராட்டப்பட்டது. மேலும், துறை வாரியாக முதல் இரு இடங்களைப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.