கும்பகோணத்தில் முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யடப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கும்பகோணம் மாதுளம்பேட்டை தெரு ராமச்சந்திரா நகரைச் சேர்ந்த சங்கர் மகன் சக்திவேல் (23). இவர் மாதுளம்பேட்டை தெருவில் உள்ள மோரி வாய்க்கால் சாக்கடைத் தொட்டியில் திங்கள்கிழமை காலை வெட்டுப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் சக்திவேலுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக, சக்திவேல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு, சாக்கடை தொட்டியில் போடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக மாதுளம்பேட்டை மாரியம்மன் கோயில் தெரு கார்த்தி (29), தமிழ்ச்செல்வன் (24), மணிமாறன் என்கிற காளிதாஸ் (22), ராஜாராம் காலனியை சேர்ந்த விஜய் (22), ராஜகுரு (25), பரணிதரன் (24) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.