தஞ்சாவூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள், கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலி வழங்கப்படுகிறதா என்பது குறித்து தொழிலாளர் உதவி ஆய்வர்களால் சிறப்பாய்வு செய்யப்பட்டது.
குறைந்தபட்ச கூலி வழங்கப்படாத நிறுவனங்களின் மீது கேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கேட்பு மனுக்கள் குறித்து திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் புதன்கிழமை விசாரித்தார். இதில், 7 நிறுவனங்களில் பணிபுரியும் 24 தொழிலாளர்களுக்கு ரூ. 1,83,713 ஊதிய நிலுவைத் தொகையைப் பெற்று வழங்கினார்.
மேலும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் எடையளவு சட்டத்தின் கீழ் 61 வழக்குகளும், பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் 11 வழக்குகளும் தொடரப்பட்டு, இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ. 1,43,500-ம், இதர தொழில்நுட்பமற்ற சட்டங்களின் கீழ் 137 வழக்குகள் தொடரப்பட்டு, இணக்கக் கட்டணமாக ரூ. 46,700-ம் வசூல் செய்யப்பட்டு, அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது என்று தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் இர. கவிஅரசு தெரிவித்துள்ளார்.