தஞ்சாவூர் மாவட்டத்தில் வேட்பாளர்களின் செலவின விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி மற்றும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு அரசியல் கட்சியின் தேர்தல் செலவுகளைக் கண்காணிப்பதற்குச் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அஸ்ஸாம் மாநில ஐ.ஆர்.எஸ். அலுவலர் மந்துகுமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 9385285802 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளுக்கு மேற்கு வங்க மாநில ஐ.ஆர்.எஸ். அலுவலர் பிரகாஷ்நாத் பன்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை 9385285803 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மயிலாடுதுறை தொகுதிக்குள்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஆந்திர மாநில ஐ.ஆர்.எஸ். அலுவலர் சதீஷ் தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்லிடப்பேசி எண் 9360141044.
மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் உதவி செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவியாகக் கணக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவின விவரங்களைக் கண்காணித்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்படும் 1800-425-8036 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.