காட்டுமன்னார்கோவில் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை கிராம இளைஞர்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காட்டுமன்னார்கோவிலை அடுத்த சிவாயம் கிராமத்தில் வடக்குத் தெருவில் செவ்வாய்க்கிழமை காலை வயல்வெளி பகுதிக்குச் பெண்கள் சென்றனர். அப்போது வயலில் முதலை ஒன்று ஊர்ந்து வந்ததைப் பார்த்து சப்தமிட்டனர்.
உடனடியாக வந்த கிராம இளைஞர்கள் போராடி முதலையை பிடித்து கட்டி தெருவுக்கு தூக்கி வந்தனர் .
இது குறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் வந்த வனத்துறையினர் முதலையை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வக்காரமாரி குளத்தில் கொண்டுபோய் விட்டனர்.
ஒவ்வொரு முறையும் கிராமங்களில் புகுந்த முதலைகளை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பதும், அதனை வக்காரமாரி குளத்தில் விடுவதும், மீண்டும் அந்த முதலைகள் வெளியேறி கிராமங்களில் புகுவதுமாக இருந்து வருகிறது என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.