மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்த நாள் விழா கடலூர் துறைமுகத்தில் உள்ள தெற்கு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் இராம.முத்துக்குமரனார் தலைமை வகித்து, பாரதியார் பிறந்த தின பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பேசினார். விழாவுக்கு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.தியாகராஜன், தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராஜமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பெட்காட் மாவட்டச் செயலாளர் பி.ராமகிருஷ்ணன், வர்த்தக சங்க நிர்வாகி பி.பழனி, வாசகர் வட்டம் பி.குமார், ஆசிரியர் வி.விஜயராமன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக நூலகர் எம்.சந்திரசேகரன் வரவேற்க, ஆசிரியை ஆர்.பாமினி நன்றி கூறினார்.