தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீஸார் கடந்த அக்.31-ஆம் தேதி புதுப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, பா.சரவணன் (47) என்பவரது வீட்டின் தோட்டத்தின் பின்புறம் மறைத்து வைத்திருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில், கடலூர் புதுநகர் காவல் நிலையம், கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவில் 17 சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் மதுவிலக்கு போக்கிரி பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவரது குற்ற செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரைத்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அதற்கான உத்தரவைப் பிறப்பித்ததை தொடர்ந்து ஓராண்டு காலம் சிறையில் அடைக்கும் வகையில் பா.சரவணன் தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டார்.