என்எல்சி சுரங்கம்-1 விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசின் புதிய சட்டத்துக்கு உள்பட்டு மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அவர்கள் அளித்த மனு:
நெய்வேலி அருகே வடக்கு வெள்ளூர், வானதிபுரம், அகிலாண்டபுரம், அம்மேரி உள்ளிட்ட 16 கிராமங்களில் என்எல்சி சுரங்கம்-1 விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தமிழ்நாடு அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட விதிகளுக்குள்பட்டது என்று கூறப்படுகிறது. இந்தச் சட்டம் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டால் எங்களுக்கு (கிராம மக்களுக்கு) குறைந்த தொகை மட்டுமே கிடைக்கும்.
வேலைவாய்ப்போ, வாழ்வாதாரமோ கிடைக்காது. ஆனால், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டத்தில் வேலைவாய்ப்பு, மாற்றுக் குடியிருப்பு போன்ற பல்வேறு சலுகைகள் உள்ளன.
எனவே, எங்களது நிலத்தை மத்திய அரசின் புதிய சட்டத்துக்கு உள்பட்டு கையகப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.