செயல்வழிக் கற்றல் வகுப்பறைகள் திறப்பு
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜவஹர் பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறையிலான நவீன வகுப்பறைகள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ஜவஹர் பள்ளிகளில், மத்திய, மாநில பாடத் திட்டத்தில் கல்வி கற்பிக்கும் 2 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளின் இணைப்புப் பள்ளிகள் பல்வேறு வட்டங்களிலும், மந்தாரக்குப்பத்திலும் இயங்கி வருகின்றன. இதன்படி, நெய்வேலி வட்டம் 9-இல் மத்திய பாடத் திட்டத்தின்கீழ் செயல்படும் ஜவகர் மேல்நிலைப் பள்ளியின் இணைப்புப் பள்ளியிலும், வட்டம் 28-இல் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் செயல்படும் ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இணைப்புப் பள்ளியிலும் மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த இணைப்புப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறையில் கல்வி கற்பிக்கும் நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள் சமீபத்தில் அமைக்கப்பட்டன.
இந்த வகுப்பறைகள் திறப்பு விழா இரண்டு பள்ளி வளாகங்களிலும் நடைபெற்றன. இதில், சிறப்பு விருந்தினராக என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநரும், ஜவஹர் கல்விக் கழகப் புரவலருமான ஆர்.விக்ரமன் பங்கேற்று, நவீன வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
ஜவஹர் கல்விக் கழகச் செயலர் எஸ்.ஞானசம்பந்தம், கல்விக் கழகப் பொறுப்பாளர்கள், பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.