புயல் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு

கஜா புயலுக்கு நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினரின் ஒரு நாள் ஊதியம் வழங்கப்படும் என அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் கடலூரில் புதன்கிழமை கூறினார்.

கஜா புயலுக்கு நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினரின் ஒரு நாள் ஊதியம் வழங்கப்படும் என அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் கடலூரில் புதன்கிழமை கூறினார்.
 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், இணைப்புச் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோ.சீனிவாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கே.ஆர்.குப்புசாமி, கு.சரவணன், சுரேஷ்பாபு, வீரப்பன், ஜெயச்சந்திரராஜா, கோதண்டம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் கோபிநாத் சிறப்புரையாற்றினார்.
 கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:
 கஜா புயல் நிவாரண நிதிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம், அதன் 15 இணைப்புச் சங்கங்கள், சகோதர சங்கங்களைச் சேர்ந்த 3 லட்சம் பேர் தங்களது ஒருநாள் சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்க உள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப் பணியாளர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் முன் பணமாக வழங்க வேண்டும்.
 தமிழத்தில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள சுமார் 2.50 லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் வருகிற டிசம்பர் 2- ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.
 அதைத் தொடர்ந்து 6 -ஆவது மாநில மாநாடு கடலூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பு ஒன்றானதை வரவேற்கிறோம்.
 இந்தக் கூட்டமைப்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்துக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், சங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு போராட்டங்களை டிசம்பர் 15 -ஆம் தேதி வரை ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 செய்தியாளர் சந்திப்பின் போது, சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலர் ஏ.வி.விவேகானந்தன், விழுப்புரம் மாவட்டச் செயலர் வி.சிவகுமார், கடலூர் மாவட்ட முன்னாள் செயலர் மு.ராசாமணி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com