கடலூரில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலூர் குண்டுஉப்பலவாடி தியாகமுதலி தெருவைச் சேர்ந்தவர் கோபால் மனைவி சங்கீதா (38). இவர் செவ்வாய்க்கிழமை வீட்டின் சமையல் அறையில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக 4 தனிப் படைகளை அமைத்துள்ளார்.
துணைக் கண்காணிப்பாளர் த.அ.ஜெ.லாமேக், திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் உதயகுமார், தேவனாம்பட்டினம் ஆய்வாளர் கதிரவன், டெல்டா பிரிவு காவல் உதவி ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் தலைமையில் இந்தத் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளன.
தனிப் படையினர் அந்தப் பகுதியில் வேலை செய்து வந்த வட மாநிலம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், குண்டுஉப்பலவாடி பகுதியைச் சேர்ந்த சந்தேகத்திற்கிடமான சில நபர்கள் உள்பட சுமார் 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.