வேன் ஒன்றில் 29 பள்ளிக் குழந்தைகளை அடைத்து ஏற்றி வந்த வாகன ஓட்டுநருக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.
கடலூர் கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக் காவல் பிரிவு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் போலீஸார் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வேனில் 29 குழந்தைகளை அடைத்து பள்ளிக்கு ஏற்றிச் சென்றது கண்டறியப்பட்டது.
அதிகபட்சமாக 10 குழந்தைகள் வரை மட்டுமே ஏற்றிச் செல்லக்கூடிய வாகனத்தில் 29 குழந்தைகளை அடைத்து ஏற்றிச் சென்றதால், அந்த வாகன ஓட்டுநர் கடலூர் முதுநகரைச் சேர்ந்த சேகருக்கு (46) ரூ. 2,100 அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் பள்ளிக் குழந்தைகளை வேறு வாகனங்களின் மூலம் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் சேகரின் வாகன உரிமத்தை ரத்து செய்யக் கோரி, கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு போக்குவரத்து காவல் துறையினர் பரிந்துரைத்தனர்.