சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த டேங்கர் லாரி!

 உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே பெட்ரோல் - டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கிளீனர் காயமடைந்தார்.

 உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே பெட்ரோல் - டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கிளீனர் காயமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்த  செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான டேங்கர்  லாரி சென்னையிலிருந்து 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், 19ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி உளுந்தூர்பேட்டையை செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே வரும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டையில் மோதி சாலையோரம் இருந்த 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 
இதில் குளித்தலையைச் சேர்ந்த ஓட்டுநர் காளியப்பன் காயமின்றி தப்பினார். கிளீனர் கரூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் காயமடைந்தார். அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்புப் படையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று டேங்கர் லாரியில் சேதமடைந்து டீசல் கசிந்து கொண்டிருந்த பகுதியை சீரமைத்தனர். பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்த பகுதியில் எவ்வித சேதமும் ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com