கடலூர் அருகே அரசு மணல் குவாரியில் முறைகேடாக மணல் ஏற்றியதாக 7 லாரிகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் அருகே உள்ள அழகியநத்தம் கிராமத்தில் தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியிலிருந்து அள்ளப்படும் மணல் அருகிலுள்ள மருதாட்டில் கொட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு பிரத்யேகமாக உருவாக்கியுள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே மணல் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும், முன்பதிவு செய்துள்ள லாரிகளே நாள்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், சில லாரிகள் வந்தவுடன் உடனடியாக மணல் ஏற்றிச்சென்றனவாம். எனவே, இதில் முறைகேடு நடைபெறுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் மாவட்ட எஸ்பி (பொ) ஜெயக்குமார் உத்தரவின்பேரில் கடலூர் உள்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் த.அ.ஜோ.லாமேக் தலைமையில் சிறப்பு காவல் படையினர் சனிக்கிழமை காலையில் மருதாட்டில் உள்ள மணல் மறுவிற்பனை மையத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, 7 லாரிகள் போலியான அனுமதிச்சீட்டு பெற்று மணல் ஏற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கிருந்த லாரி ஓட்டுநர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். மேலும், பொதுப் பணித் துறையால் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டிருந்த உதவியாளர், மணல் குவாரியை நடத்தி வரும் 6 பேர் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கிடையில், மாவட்ட எஸ்பி (பொ) ஜெயக்குமார் விழுப்புரத்திலிருந்து வந்திருந்து மணல் குவாரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்யவும், இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.