பதிவு பெறாத நிதி நிறுவனம், ஏலச் சீட்டு நிறுவனங்களில் பணம் செலுத்தி மக்கள் ஏமாறுவதை தடுக்கும் வகையில், கடலூர் மாவட்ட பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வடலூர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆய்வாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பதிவு செய்யாத நிதி நிறுவனங்கள், ஏலச்சீட்டு, சிறு சேமிப்பு நிறுவனங்களால் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வில், குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் சித்ரா, லட்சுமி, மணிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.