பண்ருட்டி, திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோயிலில் ஏகதின பிரம்மோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் பிரசித்திபெற்ற சரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் மூலவரான சரநாராயணப் பெருமாள் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருப்பதி வெங்கடேசப் பெருமாள் அலங்காரத்தில் நெய் தீப ஒளியில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஏகதின பிரம் மோத்ஸவ விழா கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்ன, சிம்ம, அனுமந்த், சேஷ, கருட, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினார்.
தொடர்ந்து மாலை 6 மணியளவில் திருத்தேர் உற்சவமும், இரவு 7 மணியளவில் தீர்த்தவாரியும், 7.30 மணியளவில் கொடியிறக்கமும் நடைபெற்றது. விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.