திட்டக்குடி அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.
திட்டக்குடி அருகே உள்ளது கழுதூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இந்திராணி (35), ஜெயராணி (25), தனலட்சுமி (23) ஆகியோர் கூலி வேலைக்காக ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி இரும்புக் கம்பிகளை ஏற்றிவந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற 3 பெண்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் இந்திராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பெண்களும் பலத்த காயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வேப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.