பீமன் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திட்டக்குடி வட்டாட்சியரிடம் இளைஞர்கள் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, திட்டக்குடி வதிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வட்டாட்சியர் (பொ) ரவிச்சந்திரனிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திட்டக்குடி, வதிட்டபுரத்தில் சுமார் 183 ஏக்கர் பரப்பளவில் பீமன் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதனால், ஏரியில் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீரைத் தேக்க முடியவில்லை. இதனால், பாசனத்துக்கு முறையாக தண்ணீர் பெற முடியாமல் விவசாய நிலப் பரப்பு குறைவதோடு, அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து வருகிறது. எனவே, பீமன் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்தார்.