கடலூர் மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் மாவட்ட அளவிலான கலை விழா, இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், மாவட்ட அளவிலான இளையோர் நாடாளுமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றன.
மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் மா.ஹெலன்ராணி தலைமை வகித்தார். தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நேரு இளையோர் மையத்துடன் இணைந்து சிறப்பாக செயலாற்றி வரும் 40 இளையோர் மன்றங்களுக்கு கிரிக்கெட், கேரம், கையுந்துப் பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து மாவட்ட கலை விழாவில் முதல் 3 இடங்களைப் பிடித்த கலைக் குழுவினருக்கு பரிசு, சான்றிதழ், கேடயங்களை வழங்கினார். மேலும், இளையோர் மையம் மூலமாக நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளான தையல், அழகுக்கலை பயிற்சி முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழையும் அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் மா.ராஜா, தூய்மை பாரத ஒருங்கிணைப்பாளர் ரா.ச.வேலுமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கடலூர் நகர்மன்ற முன்னாள் தலைவர்
ஆர்.குமரன், முன்னாள் துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், கவுன்சிலர்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன், அதிமுக நிர்வாகி ஏழுமலை மற்றும் 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். முன்னதாக இளையோர் மைய கணக்காளர் கே.புஷ்பலதா வரவேற்க, தேசிய இளையோர் சேவை தொண்டர் ஜி.கிரிஜா நன்றி
கூறினார்.