மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு, மேற்கு, விழுப்புரம் கிழக்கு, மேற்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர்கள் செந்தாமரைக் கண்ணன், கோவிந்தராஜன், எஸ்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், வருகிற 24-ஆம் தேதி மனதின் குரல் என்றத் தலைப்பில் பிரதமர் பேசும் நிகழ்ச்சியை அனைத்து மக்களும் கேட்கும் வகையில் கட்சியினர் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வரும் 26-ஆம் தேதி மத்திய அரசின் திட்டத்தினால் பயனடைந்தவர்களின் வீடுகளில் தாமரை சின்னம் கோலமிடுதல் மற்றும் விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியை நடத்துதல், 28-ஆம் தேதியன்று மண்டலம் வாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்வது,
மார்ச் 2-ஆம் தேதி சட்டப் பேரவை தொகுதி வாரியாக மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
மாவட்டத் தலைவர்கள் விநாயகர், தாமோதரன், கோட்ட பொறுப்பாளர்கள் சுகுமார், அருள், முன்னாள் மாவட்டத் தலைவர் தேவ.சரவணசுந்தரம், நெசவாளர் அணி மாநில செயலர் அய்யப்பன்ரவி, கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஏ.எம்.வெங்கடேசன், ஆர்.குணா, பொன்னிரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.