வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் உபரியாக உள்ள மின் சக்தியை தென் மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் வகையில், தேசிய புனல் மின் நிறுவனத்துடன் என்எல்சி இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியாவும், மற்றொரு பொதுத் துறை நிறுவனமான தேசிய புனல்மின் நிறுவனமும் இணைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உபரியாக உள்ள மின் சக்தியை, தென் இந்தியாவில் தேவைப்படும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.
இதன்படி, என்எல்சி இந்தியா நிறுவன மின் நிலையங்கள், தேசிய புனல் மின் நிலையத்தின் மின் நிலையங்களில் உபரியாக உள்ள மின் சக்தியை நாட்டின் தென் பகுதியில் தேவைப்படும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
என்எல்சி இந்தியா நிறுவன வர்த்தகத் துறை செயல் இயக்குநர் எ.கணேசன், தேசிய புனல் மின் நிறுவன நிதித் துறை தலைமைப் பொது மேலாளர் டி.சக்கரவர்த்தி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார், மனிதவளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் நாதள்ளா நாக மகேஷ்வர்ராவ் ஆகியோர் காணொலி காட்சி மூலம் இணைந்து கொண்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களின் வர்த்தகம் மேம்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.