திருக்கோவிலூர் தேகளீச பெருமாளுக்கு, பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் உற்சவ மூர்த்தி தேகளீச பெருமாள். இவர், கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்பது வழக்கம். நிகழாண்டு, மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்பதற்காக கடந்த 14-ஆம் தேதி திருக்கோவிலூரில் இருந்து தேகளீச பெருமாள் புறப்பட்டார்.
தொடர்ந்து, 19-ஆம் தேதி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில் பங்கேற்றார். இதையடுத்து, திருக்கோவிலூர் திரும்பும் வழியில் பண்ருட்டி மேலப்பாளையத்துக்கு தேகளீச பெருமாள் விஜயம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பின்னர், பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை எழுந்தருளினார். அங்கு மாலையில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு மண்டகபடி வைபவத்தில் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய திருமாலையை திருக்கோவிலூர் தேகளீச பெருமாளுக்கும், பண்ருட்டி வரதராஜப் பெருமாளுக்கும் அணிவிக்கும் வைபவமும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹிந்து சமுதாய ஆன்மிக அறக்கட்டளையினர், தாமரை பூ சகஸ்கரநாம குழுவினர் செய்திருந்தனர்.