கடலூர் அருகே அமமுக பிரமுகரின் தம்பியிடமிருந்து ரூ.4 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் 63 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் கடலூர் அருகே பச்சையாங்குப்பம் இரட்டைசாலைப் பகுதியில் வட்டாட்சியர் எஸ்.சிவா தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், காவலர்கள் பத்மநாபன், தரணி ஆகியோர் இடம் பெற்றிருந்த இந்தக் குழுவினர் அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டதில், அந்த காரில் ரூ.4 லட்சம் இருந்தது தெரிய வந்தது. ஆனால், பணத்துக்கான உரிய ஆவணம் எதுவும் இல்லையாம். இதையடுத்து, பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பணம் எடுத்துச் சென்றவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாவட்ட செயலர் பாலமுருகனின் தம்பி வேல்முருகன் என்பது தெரிய வந்தது.
இவர் காட்டுமன்னார்கோவிலில் இருந்து கடலூருக்கு வந்ததாகவும், இந்தப் பணத்தை ஒப்பந்தத் தொழிலுக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு பறக்கும் படையினர் தெரிவித்தனர்.