கடலூர் பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச் சாவடி அமைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு என்ற இலக்கை நோக்கி கடலூர் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடலூர் பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச் சாவடி வியாழக்கிழமை அமைக்கப்பட்டது. இதில், வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துக் கொள்ளும் (யயடஅஈ) இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த பயணிகளிடம் வாக்களிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வீதி நாடகம்: மேலும், 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேருந்து நிலையத்தில் வீதி நாடகம் நடத்தப்பட்டது. செய்தி-மக்கள் தொடர்புத் துறை சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு விடியோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாதிரி வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்திருந்த பொதுமக்களிடம் விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் நலன் கருதி அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
கடலூர் சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ, கடலூர் நகராட்சி ஆணையர் ப.அரவிந்த்ஜோதி, இளநிலை பொறியாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.