கடலூர் மாவட்டத்தில் விபத்துகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி ப.சரவணன் கூறினார்.
இவர், பண்ருட்டி காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர், நகரப் பகுதியில் இரவு ரோந்துப் பணி செல்லும் காவலர்களின் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் 70 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இ-பீட் மையங்கள், காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உடல்பயிற்சி மையம், இணைப்புச் சாலை 4 முனைச் சந்திப்பில் அமைப்பட்ட தண்ணீர் பந்தல் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், நகரப் பகுதியை கண்காணிக்கும் வகையில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட 60 கேமராக்களை இயக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் எஸ்பி கூறுகையில், மாவட்டத்தில் மொத்தம் 81 இடங்கள் விபத்து ஏற்படும் இடங்களாக கண்டறிந்து, முன்னுரிமை அடிப்படையில் சரி செய்து வருகிறோம் என்றார்.
அப்போது டிஎஸ்பி கோ.நாகராஜன், காவல் ஆய்வாளர் ப.சண்முகம், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கல்யாணராமன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, பண்ருட்டி நகருக்கு வந்த எஸ்பி ப.சரவணனை, வணிகர் சங்க நிர்வாகிகள் டி.சண்முகம், மோகனகிருஷ்ணன், ராஜேந்திரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆர்.சந்திரசேகர், கோ.காமராஜ் மற்றும் தொழிலதிபர் எஸ்.வி.அருள் ஆகியோர் வரவேற்றனர்.