தீபாவளி பணம் கிடைக்காதவர்களுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் விரைவில் பணம் செலுத்தப்படும் என்று அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை கூடுதல் செயலர் மற்றும் இயக்குநர் வல்லவன் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு இலவச அரிசி, சர்க்கரைக்குப் பதிலாக பணமாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 3 லட்சத்து 42 ஆயிரத்து 173 குடும்ப அட்டைதாரர்களில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 857 பேருக்கு பணம் செலுத்தப்பட்டுவிட்டது.
மீதம் உள்ள 13 ஆயிரத்து 316 அட்டைதாரர்களுக்கு கீழ்க்காணும் காரணங்களால் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
குடும்பத் தலைவர் இறப்பு, குடும்பத் தலைவர் மாற்றம், ஆதார் எண் பதிவு, வங்கிக் கணக்குப் பதிவு மேற்குறிப்பிட்ட அனைத்து குறைபாடுகளும் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மூலம் சரி செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார் வல்லவன்.