தேசிய பத்திரிகையாளர் தினம்: புதுவை முதல்வர் வாழ்த்து

தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
 ஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரஸ் கவுன்சில் தொடங்கப்பட்ட தினமான நவ.16-ஆம் தேதி தேசிய பத்திரிகையாளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகைகள், அந்த நாட்டில் நல்லாட்சி நடந்திட பெரிதும் துணை புரிகின்றன. நாட்டில் நிலவும் சூழ்நிலைகளை அலசி ஆராய்ந்து, நிபுணர்களின் கருத்துகளையும், மக்களின் எண்ணங்களையும் எடுத்துரைப்பவை பத்திரிகைகளே ஆகும். அவற்றின் மூலமாக ஆட்சியாளர்களால் சிறப்பான நிர்வாகத்தைக் கொடுக்க முடிகிறது. குரலற்ற சாமானிய மனிதர்களுக்கும் காவலாக இருந்து, அவர்களுக்காக குரல் கொடுப்பவை பத்திரிகைகளே ஆகும்.
 பத்திரிகையாளர்களின் பணி மிகவும் சவாலான ஒன்றாகும். இயற்கைச் சீற்றங்கள், அரசியல் மாற்றங்கள், வணிக ஏற்ற இறக்கங்கள் என அனைத்துச் செய்திகளையும் மக்களுக்கு கொண்டு செல்லும் மகத்தான பணியில் துணிச்சலுடன் பணியாற்றும் பத்திரிகையாளர்களை உளமாறப் பாராட்டுகிறேன்.
 உலகெங்கிலும் ஜனநாயகத்துக்கும், மதச் சார்பின்மைக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் ஆபத்து நேரும்போதெல்லாம் அதைக் காப்பதில் முக்கிய பங்கு வகுப்பவை பத்திரிகைகளே. நம் நாடு மிகவும் நெருக்கடியான ஒரு சந்தர்ப்பத்தில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில், பத்திரிகையாளர்கள் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் உண்மையின் உரைகல்லாக நியாயத்தின் பக்கம் நின்று, தருமம் வெல்ல துணை நிற்க வேண்டும். இந்த நாளில் அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com