புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஸ்ரீ அன்னை மகா சமாதி அடைந்த தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 21.2.1878-இல் பிறந்தவர் அன்னை. அவரது இயற்பெயர் மீரா அன்போன்சா. அரவிந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 29.3.1914-இல் புதுச்சேரி வந்தார். அன்னையின் பெரு முயற்சியால் அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரம் ஆகியவை தோற்றுவிக்கப்பட்டன.
அன்னை மீரா 17.11.1973-இல் உயிர் நீத்தார். அவரது 45-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை பயன்படுத்திய பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. அன்னையின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அவர் தங்கியிருந்த அறை பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் புதுச்சேரி மட்டுமன்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கூட்டு தியானம் நடைபெற்றது.