புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
புதுவை அரசின் சமூக நலத்துறை சார்பில் புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. வெற்றி பெறுவோர்களுக்கு புதுச்சேரியில் டிச.4-ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
புதுவை அரசுத்துறைகள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் 24-ஆம் தேதி காலை 8 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என புதுவை அரசின் சமூகநலத் துறை இயக்குநர் சாரங்கபாணி தெரிவித்துள்ளார்.