புதுச்சேரியில் மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் இல்லங்கள் என்னும் மாணவர்கள் திறன் ஊக்குவிப்புப் பயிற்சிகள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச மாணவர் தினத்தை முன்னிட்டு சிறப்புப் பயிற்சி நிகழ்வாக "நீங்களும் சிறந்த பேச்சாளராகலாம்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் லாஸ்பேட்டை தனியார் மழலையர் பள்ளியில் செயல்பட்டு வரும் மரியம் மிர்சகாணி துளிர் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
துளிர் இல்ல பொறுப்பாளர் ஜெயந்தி வரவேற்றார். புதுவை அறிவியல் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தார்.
ஜேசிஐ இந்தியா அமைப்பின் பயிற்சியாளர்கள் தனசேகரன், மகாலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக, துளிர் இல்ல மாணவி ஷிவமோகிதா நன்றி கூறினார்.