காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்கத்தினர் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை பொதுப்பணித் துறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் உள்பட 120 பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, காலியாக உள்ள பொறியாளர் பதவிகளை நிரப்பக் கோரி புதுவை பொதுப்பணித் துறை பொறியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் புதுவை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க உறுப்பினர் எழில்வண்ணன் தலைமை வகித்தார். புதுவை மின்துறை பொறியாளர் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், இஸ்மாயில், சிவச்சந்திரன், சங்கர், பக்தவச்சலம் அரசு சம்மேளன நிர்வாகிகள் பாலமோகனன், பிரேமதாசன், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.