ஒரு வாரத்தில் பள்ளி, கல்லூரிகளில்ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்று நட ஆளுநர் உத்தரவு

இன்னும் ஒரு வாரத்துக்குள் புதுவை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் தலா ஒரு மரக்கன்றை நட வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை துணை நிலை


இன்னும் ஒரு வாரத்துக்குள் புதுவை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் தலா ஒரு மரக்கன்றை நட வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
புதுவை ஆளுநர் கிரண் பேடி வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், சனிக்கிழமை தனது 191-ஆவது கள ஆய்வாக பாகூர் அருகே இருளன்சந்தையில் உள்ள பாரதி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு மரக்கன்று நடுவது தொடர்பாக அவர் ஆய்வு செய்தார். அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஆளுநர் கிரண் பேடி தொடக்கிவைத்தார்.
அப்போது, அவர் வட கிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடுவதற்கு வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தலா ஒரு மரக்கன்றை இன்னும் ஒரு வாரத்துக்குள் நடுவதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகங்களை வனத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடையே மரக்கன்றுகளை நடும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். இதன் மூலம் தூய்மை பசுமை இயக்க இலக்கை புதுவை எட்ட முடியும் என்றார்.
தொடர்ந்து அவர், இருளன்சந்தையில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
அப்போது, உள்ளாட்சிச் செயலர் ஜெ.ஜவஹர், உள்ளாட்சித் துறை இயக்குநர் ஜி.மலர்க்கண்ணன், ஆளுநரின் கூடுதல் செயலர் ஜி.ஸ்ரீனிவாஸ், வனப் பாதுகாவலர் ஜி.குமார், பாரதி அரசு மேல்நிலைப் பள்ளி முதல்வர் கரிமா தியாகி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜி.செளந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com