திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதையொட்டி, கொடிக்கம்பம் அருகே உள்ள பெரிய நந்திக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம் செய்து, பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் சாற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடத்தினர்.
பக்தர்கள் ஏராளமானோர் அபிஷேகத்துக்காக பால் வழங்கியிருந்தனர். மேலும் அருகம்புல் மாலை கொண்டுவந்து பக்தர்கள் நந்திக்கு சாற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் தரும்புர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்று முதல் பிரதோஷம் என்பதாலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.