புதுவை முதல்வர் வே.நாராயணசாமியின் போராட்டத்துக்கு மாநில எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்காமியும் ஆதரவு தர வேண்டும் என்று மனித உரிமைகள் - நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் முருகானந்தம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆளுநர் ஒப்புதல் தரவேண்டிய 39 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13-ஆம் தேதி முதல் ஆளுநர் மாளிகை எதிரே முதல்வர் நாராயணசாமி தொடர் தர்னாவில் ஈடுபட்டு வருகிறார்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆள முடியாத சூழலே தொடர்கிறது. இதேநிலை நீடித்தால், புதுவை மக்கள் தேர்தலையே புறக்கணிக்கக்கூடிய சூழல் உருவாகும்.
முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் அவரது உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, அரசு நிர்வாகத்தில் குறிப்பாக முதல்வர் பதவியில் இருப்பவர்களுக்கான உரிமைக்கான போராட்டம்.
எனவே அவரது போராட்டத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியும் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்க வேண்டும் என அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.