மாசிமகத்தையொட்டி, அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி ஸ்மர்த்த மஹராஜ் சேவா அறக்கட்டளை சார்பில், அக்கல்கோட் மஹராஜின் வெள்ளிப் பாதுகைகள் கடல் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.
முன்னதாக, புதுச்சேரி முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோயில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ சாயி ஸமர்த்த அக்கல்கோட் மஹராஜின் வெள்ளிப் பாதுகைகளை பக்தர்கள் நாகஸ்வர மேள - தாளத்துடனும், நாம சங்கீர்த்தனத்துடனும் ஊர்வலமாக வைத்திக்குப்பம் கடற்கரைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு, பாதுகைகள் கடல் தீர்த்தவாரி கண்டருளின.
இதையடுத்து, சாயி ஸமர்த்த ராகவேந்திர சுவாமிக்கும், ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், மங்கள ஆரத்தி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, அறக்கட்டளை சார்பில் வைத்திகுப்பம் கடற்கரைப் பகுதி, முத்தியால்பேட்டை தனியார் மண்டபம் ஆகிய இடங்களில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.