புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (பிப். 22) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து புதுவை அரசின் தொழிலாளர் துறை கூடுதல் செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான வல்லவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு தொழிலாளர் துறை சார்பில், வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரி - வழுதாவூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் ஐஸ்வர்யம் ஸ்பெஸாலிட்டி சர்வீஸ் மேனேஜ்மென்ட் என்ற தனியார் நிறுவனம் நேர்முக தேர்வை நடத்த உள்ளது.
நேர்முகத் தேர்வில் சென்னை, புதுச்சேரியில் உள்ள 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 23 வயது முதல் 40 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்ற நபர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். பணியில் சேர்பவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வழங்கப்படும்.
முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது சுய விவரத் தகவல் (பயோ டேட்டா), கல்வித் தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.