புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக (பொ) சித்ரா நியமிக்கப்பட்டார்.
இந்தப் பல்கலை. பதிவாளராக சசிகாந்ததாஸ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பல்கலை.யின் நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், துணைவேந்தர் குர்மீத் சிங், புல முதல்வர்கள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பதிவாளர் சசிகாந்ததாஸின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், அவரை அந்தப் பதவியில் இருந்து விடுவிக்க முன்மொழியப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் பெரும்பாலானோர் அதற்கு ஒப்புதல் அளித்து, உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பல்கலை.யின் புதிய பதிவாளராக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சித்ரா நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவர் புதிய பொறுப்பை புதன்கிழமை மாலையே ஏற்றுக் கொண்டார். பதிவாளர் பொறுப்புடன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பொறுப்பை சித்ரா கூடுதலாக கவனிப்பார்.
பல்கலை. பதிவாளர் மாற்றம் தொடர்பான தகவல் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.