வரும் மக்களவைத் தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் சு.சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வருகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை தடுக்கும் நோக்கில் ஆளுநர் கிரண் பேடி செயல்படுகிறார். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நடத்திய 6 நாள்கள் தர்னா போராட்டத்தை அடுத்து, ஓரிரு திட்டங்களுக்கு மட்டும் தற்போது கிரண் பேடி அனுமதி அளித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்க முடியாது. ஆளுநரின் அலட்சிய போக்கால் புதுவை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஆளுநர் கிரண் பேடி காலம் கடத்தாமல் மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில் ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி தேசியவாத காங்கிரஸ் சார்பில் மார்ச் 10-ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.
புதுவை மக்களுக்கு துரோகம் செய்யும் கிரண் பேடியின் கபட நாடகத்தை கிராமம் தோறும் பொதுமக்களிடம் கொண்டு செல்வோம் என புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்திருப்பது வரவேற்கக் கூடியது. இதில், காங்கிரஸின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேசியவாத காங்கிரஸ் துணை நிற்கும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு தேசியவாத காங்கிரஸ் பாடுபடும் என்றார் சுவாமிநாதன்.