புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் திங்கள்கிழமை ஆண்டாள் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருக்கும் பெண்கள் மார்கழி மாதத்தின் 27-ஆவது நாளில் விரதத்தை நிறைவு செய்கின்றனர். திருப்பாவையின் 27 -ஆவது பாடலான "சுடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என பாடி அக்காரவடிசல் எனும் உணவை இறைவனுக்கு படையலிட்டு, நோன்பை நிறைவு செய்வர்.
இந்த நாள் கூடாரவல்லி திருநாளாக அனைத்து வைணவ கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, புதுவை முத்தியால்பேட்டையில் ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில், திங்கள்கிழமை கூடாரவல்லி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆண்டாளுக்கு மாலை மாற்றும் நிகழ்வுடன், ஆண்டாள் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. இதையடுத்து, பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.